பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற சிறப்புப் படையை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் முதலமைச்சர் விஜயின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே அவர் இதற்கான கோப்பில் கையெழுத்திட்டு, திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரின் பரிந்துரையின் பேரில் உள்துறை செயலாளர் மணிவாசன் அரசாணை வெளியிட்டார். சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் ஐஜியாக மூத்த காவல் அதிகாரி பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். தொடக்க கட்டத்தில், டிஜிபி அலுவலகத்தில் ஐஜி, எஸ்பி, டிஎஸ்பிகள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நிர்வாக மற்றும் காவல் பணியாளர்களுடன் இந்தப் படை அமைக்கப்பட்டது.
பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு செயல்படும் இந்தப் படை, குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து கண்காணிக்கும். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும். மேலும், பெண்கள் தொடர்பான புகார்களுக்கு விரைவாக பதிலளித்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்து, தேவையான உதவிகளை உடனடியாக வழங்கும்.
சட்ட அமலாக்கப் பணிகளுடன் சேர்த்து, சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் இந்தப் படை ஏற்படுத்தும். தொடக்க விழா இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், தற்போது சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப்படை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த சிறப்புப் படை தனது பணிகளை தொடங்க உள்ளது.
மேலும் படிக்க: உயர்நீதிமன்ற அழுத்தத்துக்கு பின் கே.என். நேரு மீது எஃப்ஐஆர் பதிவு: பணிக்கு பணம் விவகாரத்தில் புதிய திருப்பம்