விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில், நெறிமுறைப்படி பொறுப்பு அமைச்சரான தனது பெயர் முதலில் இடம்பெறாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்: விருதுநகரில் விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், பதாகையில் (பேனர்) தனது பெயர் முதலில் இடம்பெறாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது
விருதுநகரில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது . இந்த விழாவிற்காக மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலிலும், இரண்டாவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது
விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, பேனரில் உள்ள பெயர் வரிசையைக் கண்டார் . உடனடியாக, விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த மாவட்ட கலெக்டர் சுகபுத்ராவிடம் இது குறித்து அவர் நேரடி விளக்கம் கேட்டார்
கலெக்டரிடம் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, “பொதுவாக ஒரு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பொறுப்பு அமைச்சர் யாரோ அவர்கள் பெயரை தான் முதலில் போட வேண்டும். இந்த மாவட்டத்திற்கு நான் தான் பொறுப்பு அமைச்சர் என்பதால் எனக்கு தான் முதலில் மரியாதை கொடுக்க வேண்டும். ஏன் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் வைத்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்
அரசு விழாக்களில் அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெறும் மரபுகள் மற்றும் நெறிமுறைகள் (Protocol) முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதை இந்த நிகழ்வு மாவட்ட நிர்வாகத்திற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது
அரசு விழாவில் சக அமைச்சரின் பெயர் முதலில் இடம்பெற்றதை சுட்டிக்காட்டி, துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் உரிமைக்குரல் எழுப்பியதால் அந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது