மதுரை கள்ளிக்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ஓய்வூதிய பலன்களை வழங்க கல்வி அதிகாரி 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக முதலமைச்சரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
[மதுரை]: மதுரையில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் ஓய்வூதியப் பலன்களை வழங்க 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கல்வி அதிகாரி மீது, லண்டனில் வசிக்கும் அவரது மகன் முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு குறைதீர்க்கும் வாட்ஸ்அப் எண்ணிற்கு அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ஆசிரியை சீனித்தாய், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். இவரது ஓய்வூதிய ஒப்புதல் நடவடிக்கைகளுக்காக தடையில்லா மற்றும் நிலுவையில்லா சான்றிதழ்களை (No Objection, No Due Certificate) வழங்க, கள்ளிக்குடி வட்டாரக் கல்வி அதிகாரி (BEO) முத்துக்குமார் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுத்த பிறகும் மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்துள்ளனர். இதனையடுத்து, லண்டனில் பொறியாளராகப் பணியாற்றும் ஆசிரியையின் மகன் சதீஷ், முதலமைச்சர் விஜய் அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க அறிவித்துள்ள சிறப்பு வாட்ஸ்அப் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது தாயாரின் ஓய்வூதியம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லஞ்சமாக வழங்கிய 40 ஆயிரம் ரூபாயை திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இது குறித்து ஆசிரியை சீனித்தாய் கூறுகையில், தலைமையாசிரியர் வாசுதேவன் மூலமாக இந்தப் பணம் பெறப்பட்டதாகவும், துபாயில் உள்ள தனது மற்றொரு மகன் ரோஹித் 30 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்ததாகவும், மீதமுள்ள தொகையைத் தான் நேரில் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், வட்டாரக் கல்வி அதிகாரி முத்துக்குமார் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். திருமங்கலம் கல்வி அதிகாரி (DEO) நடத்திய விசாரணையில் தன் மீதான புகாரில் உண்மையில்லை என அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாவட்டச் செயலாளர் ஜெயசந்திரன் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ் (IFHRMS) நடைமுறைக்கு வந்த பிறகு, அதிகாரிகளின் 'யூசர் நேம்' மற்றும் 'பாஸ்வேர்டு' மூலமே ஓய்வூதிய கருத்துரு தயாரிக்க முடியும் என்பதால், வேறு வழியின்றி லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் எச்சரித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தற்போதைய விசாரணையில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் வாக்குமூலம் மட்டுமே கேட்கப்பட்டுள்ளதால், புகார் அளித்த ஆசிரியை தரப்பு கருத்துகளையும் கேட்டு கல்வித்துறை அதிகாரிகள் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.









